×

‘மருந்து, மாத்திரைகள் தேவையில்லை...’ ‘108 முறை மந்திரம் சொல்லுங்க... கொரோனா அதுவா ஓடிரும்...’: திருவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

திருவில்லிபுத்தூர்:  ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து 108 முறை ஜெபம் செய்தால்,  மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும் என திருவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. உயிரிழப்பும் தொடர்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த, ஆங்கில, சித்த, ஹோமியோபதி மருத்துவத்தில் உரிய மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகின்றன. இச்சூழலில் மந்திரத்தை உச்சரித்தால், கொரோனா தானாக ஓடும் என திருவில்லி. ஜீயர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள்  மடத்தில்,  சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து  கோயில்களும் திறக்கப்பட வேண்டும். தமிழக அரசு திருவில்லிப்புத்தூர் ஆடிப்பூர  தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.  ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும். 108  முறை ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை, மக்கள் வீட்டிலிருந்து ஜெபம்  செய்தால் மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Corona Atua , Om Namo Narayanaiah, Thiruvilliputtur Jiyar, Corona
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை