சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் ஆர்.டி.அரசு (44). இவர், தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், பல்வேறு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், திமுக தலைமை அறிவுறுத்தலின்படி ஆர்.டி.அரசு எம்எல்ஏ, செல்வம் எம்பி, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ மற்றும் ஒன்றிய செயலாளர்கள் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.டி.அரசு எம்எல்ஏவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஏற்கனவே அமைச்சர் அன்பழகன், பெரும்புதூர் எம்எல்ஏ பழனி, விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கொரோனா நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுக எம்எல்ஏ அன்பழகன், கொரோனா நோய் தாக்குதலில் உயிரிழந்தார். தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனா நோய் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்.டி.அரசு எம்எல்ஏ விரைவில் நலம்பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவு
கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆர்.டி.அரசு எம்எல்ஏ விரைவில் நலம் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன். மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்ற செய்திடும்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.