புதுடெல்லி: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் 1,482 கூட்டுறவு வங்கிகள், 58 மாநில கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 8.6 கோடி வைப்புதார்கள் உள்ளனர். மொத்த சேமிப்பு வைப்பு தொகை ரூ.4.85லட்சம் கோடியாகும். இவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வராது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் செயல்பட்டு வந்த பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்க்பபட்டனர்.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி மக்களவையில் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.