சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவின் வுகான் நகரை சென்னை மாநகரம் மிஞ்சிவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் தற்போது உள்ளனர். தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,335-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து மதுரை மற்றும் தேனியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த இரு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது மக்களிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 5,55,806 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,44,666 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6,82,385 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 15,65,25,485 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பல விதமான கட்டுப்பாடுகளை விதித்திருந்த போதும் பொதுமக்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு வெளியில் சுற்றுகின்றனர். மேலும் சமூக இடைவெளி இல்லாமலும் ,முகக்கவசங்கள் இல்லாமலும் மக்கள் வெளியில் சுற்றுவது, இன்னும் கொரோனா வீரியத்தை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதை சுற்றிக்காட்டுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,939 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,699-ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் உள்ளனர்.