×

கொரோனா அறிகுறி- முதியவரை வீட்டை விட்டு விரட்டிய உறவினர்கள்: மருத்துவமனையில் அனுமதித்த மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை: கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குடும்பத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முதியவரை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்குக் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதனைக் காரணம் காட்டி அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தெரிகிறது.

இதனால் வேதனையடைந்த அந்த முதியவர் அப்பகுதி சாலை ஓரத்தில் தங்கியுள்ளார். இதனைப் பார்த்த மக்கள் அவரைப்பற்றி விசாரிக்க முதியவர் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார ஆய்வாளர்  விசாரணை நடத்தி அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அதன் பின்னர் அவர் படுத்திருந்த இடமானது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

மதுரையில் இதுவரை 1703 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர்.



Tags : Relatives ,Hospital Corona , Corona, old man
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...