×

தொடரும் கொரோனா பீதியால் வெளியே அழைத்து வர அச்சம்; குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட தயங்கும் பெற்றோர்: எதிர்காலத்தில் நோய் பாதிப்புக்கு வழி வகுக்கும் என எச்சரிக்கை

சேலம்: தமிழகத்தில் தொடரும் கொரோனா பீதியால் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போட பெற்றோர் தயங்கி நிற்கின்றனர். கொரோனா பாதிப்புகள் தற்போது,நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள்,காவல்துறையினர் என்று கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொண்டுவரும் துறை சார்ந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கர்ப்பிணி பெண்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. குழந்தைகளை வைரஸ் எளிதாக தாக்கும் என்பதால் கருவில் சுமக்கும் தாய்மார்களோடு,வீட்டில் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

முக்கியமாக குழந்தைகளை கொரோனா வைரஸ் எளிதாக  தாக்கும் என்பதால், அவர்களை வெளியே அழைத்துச் செல்ல அச்சப்படுகின்றனர். இதையே காரணமாக வைத்து, குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போடுவதையும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரையில்,ஒவ்வொரு நிலையிலும் தவறாமல் தடுப்பூசிகள் போடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும்,குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படும் தேதிகளையும் குறிப்பிட்டு கொடுக்கின்றனர். ஆனால் கொரோனா பீதியால் உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போடாததால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, எதிர்காலத்தில் உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகுத்து விடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இது குறித்து அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியதாவது:ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகள் போடுவது மிகவும் அவசியமான ஒன்று. இதனை சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். குறிப்பாக அம்மை, போலியோ, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து  தற்காத்து கொள்ள முடியும். தற்போது கொரோனா பீதியால் நகரம் மற்றும் கிராமத்தில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு மருத்துவமனைகளுக்கு வருவதில்லை. குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், நோய் தொற்று பரவிவிடும் என்ற பெருத்த அச்சமே இதற்கு காரணம்.

தமிழகத்தில் தற்போது, அம்மை, போலியோ உள்ளிட்ட நோய்கள் கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதுதான், இதற்கு காாரணம். எனவே தற்போது கொரோனாவை காரணம் காட்டி தடுப்பூசிகள் போடுவதை தவிர்த்தால், குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும்.மேலும் கொரோனாவால் தடுப்பூசிகள் போடுவதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் வதந்திகள் பரவுகிறது.இதை யாரும் நம்ப வேண்டாம். எந்த மருத்துவமனையிலும் தடுப்பூசிகள் போடுவது நிறுத்தப்படவில்லை.கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து, தற்போது வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 70.50 லட்சம் பேர் வரை உள்ளனர். இந்த  குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப உரிய நேரத்தில் தடுப்பூசிகளை போட வேண்டும் என்பதை பெற்றோர்,தங்களது கடமையாக நினைக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்.இதன்மூலம் குழந்தைகளை எதிர்கால நோய் பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

தனியாரில் தடுப்பூசி போடுவது நிறுத்தம்
கொரோனா பாதிப்பால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சைகள் அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா தொற்றுக்கு முன்பு, அந்த மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டப்பட்டு வந்தது. தற்போது,  அந்த மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை எங்கு போடுவது என்று தெரியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்
* ஒன்றரை மாதம் அல்லது 6 வாரத்தில் பென்டாவேலண்ட், போலியோ சொட்டு மருந்து, போலியோ ஊசி,ரோட்டோ சொட்டு மருந்து போட வேண்டும்.
* இரண்டரை மாதம் அல்லது 10 வாரம் வரையுள்ள குழந்தைகளுக்கு பென்டாவேலண்ட் ஊசி 2 தவணையாகவும், போலியோ சொட்டு மருந்து 2 தவணையாகவும்,ரோட்டோ சொட்டு மருந்து 2 தவணையாக போட்டுக் கொள்ள வேண்டும்.
* மூன்றரை மாதம் அல்லது 14 வாரம் வரையுள்ள குழந்தைகளுக்கு பென்டாவேலண்ட் ஊசி 3 தவணையாகவும், போலியோ சொட்டு மருந்து 3 தவணையாகவும், போலியோ ஊசி 2 தவணையாகவும், ரோட்டோ சொட்டு மருந்து 3 தவணையாகவும் செலுத்த வேண்டும்.

* குழந்தை பிறந்தவுடன் அல்லது 45 நாட்களுக்கு பிறகு, பி.சி.ஜி, போலியோ சொட்டு மருந்து, ஹெப்படைடிஸ் பி  போட
வேண்டும்.
* 10 வது மாதத்தில் தட்டம்மை ரூபெல்லா ஊசி ஒரு தவணை, மூளைக்காய்ச்சல் ஊசி ஒரு தவணை, பதினொன்றரை முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டி.பி.டி பூஸ்டர்,போலியோ சொட்டு மருந்து பூஸ்டர், தட்டம்மை ரூபெல்லா ஊசி 2 தவணையாகவும்,  மூளைக்காய்ச்சல் ஊசி  2 தவணையாகவும் போட வேண்டும்.
* 5 வயதில் டி.பி.டி பூஸ்டர், 10வது வயதில் டி.டி ஒரு தவணையாக  போட்டு கொள்ள வேண்டும். இவற்றை மருத்துவர்கள் பரிந்துரைகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு போட வேண்டும்.

Tags : Parents ,corona panic ,children ,panic ,Corona , Coronavirus, Infants, Vaccines, Disease
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...