ஹைதராபாத்: ஆந்திரா மாநிலம் கர்னூலில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தென் கொரிய நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் விபத்து ஏற்பட்டது.
அதாவது தொழிற்சாலையிலிருந்து, ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது. தொழிலாளர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியில் ஈடுபட்டதால், விஷவாயு கசிவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை; விஷவாயு கசிந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை. அது காற்றில் கலந்து, 3 கிலோ மீட்டர் துாரம் பரவியது. இதனால், ஐந்து கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விபத்து அதிகாலையில் நடந்ததால் வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் பல பேர் உயிரிழந்தனர். மேலும் 1,000க்கும் அதிகமானோர் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இதனையடுத்து விஷவாயு கசிவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த விஷவாயு கசிவு விபத்தின் சோகம் மறைவதற்குள் தற்போது நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய். அக்ரோ நிறுவனத்தில் அமோனியம் டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து கசிந்த அமோனியம் வாயுவால் பாதிக்கப்பட்ட நிறுவன மேலாளர் சீனிவாசராவ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.