சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதை தொடர்ந்து மதுரையிலும் தீவிர ஊரடங்கு கடந்த ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்குள் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் அண்டை மாவட்டமான சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கடந்த இரண்டு நாட்களாக குவிந்து வந்தனர்.
சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் முண்டியடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் மதுபானங்களை வாங்க ஆர்வம் காட்டி வந்ததால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், மிகச் சொற்ப அளவிலே விற்பனையாகும் எல்லை டாஸ்மாக் கடைகளில் கடந்த மூன்று நாட்களில் மதுபானங்கள் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்தன. இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை-மதுரை எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூடுவதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க தவறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.