ஜெனீவா: கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை மிக மோசமாக இருக்கும் என்று சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா, உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா மீண்டும் வேகமாக பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தொற்று அதிகரிக்கும் என்றும், கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் எனவும், அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான் உள்ளிட்ட 10 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, உயிர்களை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றை அதிகளவில், அதிக வேகத்தில் நடத்த வேண்டும். அனைவர்க்கும் கொரோனா தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். பெரு, சிலி, ஈரான், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் மோசமாக பாதிக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்குகிறது. உலகளவில் 200 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 என்பது குறிப்பிடத்தக்கது.