சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞரணிக்கு தற்போது மாவட்டம், மாநகரம், ஒன்றியம், பகுதி, நகரம், பேரூர் ஆகிய இடங்களில் அமைப்புகள் உள்ளன. அணியில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதால் அமைப்பை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய கிளைகள், பகுதி, நகர, பேரூர் வட்டங்களில் இளைஞரணிக்கு அமைப்பை ஏற்படுத்த தலைமை கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒன்றியக் கிளைகள், பகுதி, நகர வட்டங்களில் ஓர் அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்களும், பேரூர் வட்டங்களில் ஓர் அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்களும் கொண்ட இளைஞரணி அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில், மாவட்ட அமைப்பாளர்கள் தத்தமது மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசி ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இயக்கப் பணியாற்ற ஆர்வமுள்ள 18 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்களை இப்பொறுப்புகளுக்கு தேர்வு செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.