×

காதலித்து ஏமாற்றியதை தட்டிக்கேட்டதால் நெருக்கமாக எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மிரட்டல்: தலைமறைவான வாலிபருக்கு வலை

சென்னை: காதலித்து ஏமாற்றியதை இளம்பெண் தட்டிக்கேட்டதால் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ராணி (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்பவர், நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தேனாம்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் (29) என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், மயிலாப்பூரை சேர்ந்த ராணியை பல மாதங்களாக பின் தொடர்ந்து, காதலிப்பதாக தெரிவித்துள்ளார். முதலில் காதலை ஏற்க மறுத்த ராணி, ஒரு கட்டத்தில் ராமச்சந்திரனின் காதல் வலையில் விழுந்தார்.

இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். அப்போது, பலமுறை லாட்ஜ்களில் அறை எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். சில நாட்களில் ராமச்சந்திரன்  ராணியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அப்போது ராணி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு ராமச்சந்திரன், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதை தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த  ராணி, பரவாயில்லைல, தன்னை திருமணம் செய்துகொள் என ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் மறுத்துள்ளார். மேலும், என்னை தொந்தரவு செய்தால் ‘நாம்  இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.

ஆனாலும் ராணி, நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று  ராமச்சந்திரனிடம் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தனது காதலி ராணியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுபற்றி ராணி  கேட்டபோது, ‘இதோடு சென்று விடு. இல்லையென்றால் கொன்றுவிடுவேன், என மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ராணி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

Tags : Archives, Video, Threat, Web
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது