×

பூ பூக்கும் நேரத்தில் மழை பெய்ததால் காசா மாங்காய் மகசூல் பாதிப்பு: தொடங்கிய வேகத்தில் முடிவடைந்த சீசன்

போடி: போடி பகுதியில் பூப்பூக்கும் நேரத்தில் மழை பெய்ததால், காசா மாங்காய் மகசூல் பாதிக்கப்பட்டதால், தொடங்கிய வேகத்தில் சீசன் முடிவடைந்தது. தேனி மாவட்டம், போடியில் பரமசிவன்கோயில் கோயில் மலை அடிவார பரவு, முந்தல், பிச்சாங்கரை, அடகுபாறை, குரங்கணி, மரிமூர்புலம், வலத்துறை, அருங்குளம், வடக்குமலை, சோலையூர், சாமக்களம், முனீஸ்வரன் கோயில் பரவு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. மழை மற்றும் கொட்டகுடி ஆற்றுப் பாசனத்தால் தோப்புகளில் மா சாகுபடி நடந்து வருகிறது. மருந்து அடிப்பு, களையெடுப்பு, மராமத்து பணி என ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர்.

மார்ச் இறுதியில் மாம்பழம் சீசன் தொடங்கினால், ஜூன் இறுதியில் நிறைவடையும். இதில், மே மாத இறுதியில் காசா மாம்பழம் அறுவடை தொடங்கி, ஜூலை இறுதி வரை கிடைக்கும். ஆனால், நடப்பாண்டில் காசா மா மரங்கள் பூ எடுத்த நேரத்தில், இரண்டு நாட்கள் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால், ஜூன் முதல் வாரம் தொடங்கிய காசா மாங்காய் சீசன், தொடங்கிய வேகத்திலேயே முடிவடைந்தது. இதனால், விவசாயிகள், வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீசன் காலங்களில் லாரிகளில் லோடு கணக்கில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு காசா மாங்காய்களை அனுப்பி வைப்பர். ஆனால், இந்தாண்டு மழையின்மையால் காசா மாங்காய் மகசூல் குறைந்து வெளியூர்களுக்கு அதிகமாக மாங்காய்களை அனுப்பவில்லை என தெரிவிக்கின்றனர்.

Tags : Rainfall , Rain, Casa Mango
× RELATED மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால...