×

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையா?: சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார். எனவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை கர்நாடக அரசு விடுதலை செய்வது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 14ம் தேதி தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்ற தகவலை மறுத்தனர். அதுபோன்ற எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய சிறைத்துறை அதிகாரிகள், நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து சுதந்திர தினத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பின்னர் அந்த முடிவின் அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு ஆளுநர் ஒப்பதல் வழங்கிய பிறகே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, என்று கூறியுள்ளனர்.



Tags : Sasikala ,prison , Property accumulation case, sasikala, release, prison
× RELATED சொல்லிட்டாங்க…