பாட்னா: பீகார் மாநிலத்தில் கன மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரிந்துள்ளது. பீகாரில் நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 92 ஆக அதிகரித்துள்ளது. 15 கால்நடைகளும் இறந்துள்ளன.
அதோடு, பல வீடுகள் மின்னல் தாக்கி சேதமடைந்துள்ளது. அதிகபட்சமாக கோபால் கஞ்ச் பகுதியில் 13 பேர் இறந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பலியானவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மழை பெய்யும்போது மின்னல் தாக்கி ஒரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தளவுக்கு மக்கள் பலியாகி இருப்பது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.