மாமல்லபுரம்: முழு ஊரடங்கிற்கு பிறகு, மாமல்லபுரத்தில் அயல்நாட்டு மதுபான கடை, குடிமகன்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதிமுதல் வரும் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையாட்டி, மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஊரடங்கு ஓரளவு கடைபிடிக்கப்படுகிறது. இங்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால், பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்கு ஒரு அயல்நாட்டு மதுபான கடை உள்பட 4 மதுபான கடைகள் செயல்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து குடிமகன்கள் ஏராளமானோர் மாமல்லபுரம் வந்து பெட்டி, பெட்டியாக பல்வேறு மது வகைகளை வாங்கி சென்றனர். மேலும், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து, மாமல்லபுரம் முகப்பு வாயில் பகுதியில் உள்ள அயல்நாட்டு மதுபான கடையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மது பானங்களை மூட்டை, மூட்டையாக வாங்கி சென்றனர்.
இதனால், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனை, வாகனங்களை பறிமுதல், வழக்குப்பதிவு ஆகியவற்றை செய்து வருகின்றனர். இதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக குடிமகன்கள், மது வாங்கி வரும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டால், மது பாட்டில்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்வார்களோ என்ற பயத்தில், அயல்நாட்டு மதுபான கடைக்கு வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், யாரும் மது வாங்க வராததால் மதுபான கடையில் வந்து இறங்கிய பல லட்சம் மதிப்புள்ள பீர், விஸ்கி, ஓட்கா, ஒயின் உள்பட பல்வேறு மது வகைகள் விற்பனையாகாமல் பெட்டி பெட்டியாக உள்ளன. மதுபானக்கடையும் வெறிச்சோடி காணப்படுகிறது.