அர்ஜென்டீனா கால்பந்து வீரரும் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி நேற்று முன்தினம் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பார்சிலோனா, அர்ஜென்டீனா அணி வீரர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள விளையாட்டு பிரபலங்கள், ஃபிபா நிர்வாகிகள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் பாலன் டிஆர் விருதுகளை 6 முறை கைப்பற்றிய மெஸ்ஸியை கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தனது 18வயதில் அர்ஜென்டீனாவின் தேசிய அணியில் இடம் பிடித்தவர் 2 உலக கோப்பை உட்பட 138 சர்வதேச போட்டிகளில் விளையாடி நாட்டுக்காக 70 கோல்களை அடித்துள்ளார்.
யு20 உலக கோப்பையை அர்ஜென்டீனாவுக்காக வென்று தந்த மெஸ்ஸி, தொடர்ந்து 2014 உலக கோப்பையில் அர்ஜென்டீனா 2வது இடம் பிடிக்க காரணமாக இருந்தார்..
ஸ்பெயின் பார்சிலோனா கிளப் ஜூனியர் அணிக்காக 2003ல் அறிமுகமானார் மெஸ்ஸி. அடுத்த ஆண்டே அதாவது 17வயதில் இருந்து பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக 478 போட்டிகளில் விளையாடி 440 கோல்களை குவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் முக்கிய கால்பந்து தொடரான லா லிகா கோப்பையை பார்சிலோனா அணி 10 முறை வெல்லவும், ஐரோப்பிய சாம்பியன் கோப்பையை 4முறை வெல்லவும், அர்ஜென்டீனா 6 முறை கோபா கோப்பையை கைப்பற்றவும் மெஸ்ஸி கை கொடுத்துள்ளார். லா லிகா தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் மெஸ்ஸி சொந்தக்காரராக திகழ்கிறார். அதுமட்டுமல்ல அந்த தொடரில் அதிக முறை ஹாட்ரிக் கோல்(36முறை) அடித்த சாதனையையும் படைத்துள்ளார்.