×

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சாத்தான்குளம் வணிகர்கள் உடல்களுக்கு அஞ்சலி: வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்..!!

கோவில்பட்டி: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த 2 வணிகர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு முன்பு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்தில ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருக்கிறார்கள்.

காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடல்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு முன்பே அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர். இதனிடையே பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறையினரை பார்த்து போராட்ட கோஷங்களை எழுப்பி வந்தனர். இதற்கு முன்னதாக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவர்களது உடல்கள் வரும் வழியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இப்போது சாத்தான்குளத்தில் உள்ள காமராஜர் சிலை அருகில் அவர்களது கடைகள் முன் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முக்கிய பிரமுகர்களான தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிரான் எம்.எல்.ஏ. சண்முகம், எம்.எல்.ஏ. சண்முகநாதன் என பலரும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் சாத்தான்குளத்தை பொறுத்தவரையில் முழுவதுமாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு எதிராக போராட்டக்கள கோஷங்களை எழுப்பி வருகின்றதால் அங்கு ஒருவிதமான பதற்றம் நிலவி வருகிறது.


Tags : SATANGULAM ,police attack , Sathankulam , merchants body, tribute, merchants, public
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...