×

சசிகலாவின் பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கிய வழக்கு: 2 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்க வருமான வரித்துறை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவின் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. அந்த நேரம் வி.எஸ்.ஜே. தினகரன் என்பவரை சசிகலாவின் பினாமி எனக் கூறி, பெரம்பூர் ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்களையும், வருமான வரித்துறை முடக்கம் செய்தது.

2017-ம் ஆண்டு சசிகலாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதின் தொடர்ச்சியாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டிருந்தது. அதில் கிடைத்த ஆதாரங்களின் பேரில் நிதி நிறுவன உரிமையாளரான வி.எஸ்.ஜே.தினகரன், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் ஒரு கடை மற்றும் 11 ஆயிரம் சதுர அடி நிலத்தை வங்கியிருந்ததாக தெரியவந்தது. அந்த சொத்தைத் தான் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.

இதனை எதிர்த்து வி.எஸ்.ஜே.தினகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள தனது சொத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Sasikala , Income Tax, Sasikala, Income Tax,Icort,
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...