புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது. அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல் வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 7-ம் தேதியில் இருந்து நேற்று 17-வது நாளான விலை ஏற்றம் செய்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தற்போது பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தற்போது வழங்கப்பட்டது போல் மத்திய அரசு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் இலவச அரிசியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பணிகளை சமாளிக்க மத்திய அரசு, மாநில அரசுக்கு நிதி வழங்க வேண்டும். மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வது பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே மத்திய அரசு இதனை உடனே குறைக்க வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.