×

சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் இறந்த விவகாரம் எதிரொலி; விசாரணை கைதிகளை காவல்நிலையம் அழைத்துச் செல்ல தடை: போலீசாருக்கு டிஜிபி அறிவுரை

சென்னை: சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய வழக்குகளை தவிர்த்து, விசாரணை கைதிகளிடம் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டாம் என்று போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது கடை திறந்ததாக சாத்தாங்குளத்தில் 2 வியாபாரிகளை, விசாரணைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

வியாபாரிகள் இருவரும் தந்தை, மகன். இதனால் இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தி–்ல 2 எஸ்.ஐ. உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். வியாபாரிகள் இறந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து, காவல் துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் முக்கிய வழக்குகளில் உள்ள கைதிகளை தவிர, மற்ற விசாரணை கைதிகளிடம் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம். மேலும், விசாரணை காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஜாமீன் வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை உடனே ஜாமீனில் விட வேண்டும். போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கக் கூடாது. ஜாமீனில் விட முடியாத கைதிகளை மருத்துவ பரிசோதனையுடன் கொரோனா பரிசோதனையும் செய்ய வேண்டும்.

அதேபோல், ஊரடங்கில் வாகன சோதனையின்போது நிற்காத வாகன ஓட்டிகளை போலீசார் துரத்தி பிடித்து அடிக்க கூடாது, அவர்களின் வாகன பதிவு எண் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கு நேரத்தில் கடைகளில் தேவையில்லாமல் அமர்ந்து அரட்டை அடிப்பவர்கள் மீது கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வேவையில்லாமல் வெளியே பைக் மற்றும் காரில் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயரதிகாரிகள் மூலம் போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கி உள்ளார்.

Tags : death ,merchants ,DGP ,detainees ,affair ,The Devil , Investigator, Detention Center, Prohibition, Police, DGP
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...