ஆவடி: திருநின்றவூர் அருகே புலியூர் கிராமத்தில் கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் குளித்த போது, தனியார் கம்பெனி அதிகாரி தண்ணீரில் மூழ்கி பலியானார். ஆவடி அடுத்த திருநின்றவூர், புலியூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாநிதி (32). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தயாநிதி தனது நண்பர்களுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர், அவர் நண்பர்களுடன் புலியூர் பகுதியிலுள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்துள்ளார். அப்போது, அவர் வேகமாக வந்த தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதனையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதன்பிறகு, அவர்கள் ஊருக்கு வந்து நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறியுள்ளனர். பின்னர், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று கால்வாயில் இறங்கி தயாநிதியை தேடியுள்ளனர். மேலும், இரவு நேரம் ஆகியதால் இருட்டில் அவரை தேட முடியாமல் அனைவரும் வீடு திரும்பினர். பின்னர், நேற்று காலை தாயநிதி உடல் திருநின்றவூர், பாக்கம் பகுதியில் உள்ள கால்வாயில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து பொதுமக்கள் திருநின்றவூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவருக்கு மனைவியும், 6மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.