×

வாங்கியவுடன் கெட்டுபோன ஆவின் பால் பாக்கெட்டுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

திருவொற்றியூர்: எர்ணாவூரில் பொதுமக்கள் வாங்கிச்சென்ற ஆவின் பால் பாக்கெட்டுகள் உடனே கெட்டுப்போனதால் அதிர்ச்சியடைந்தனர். மாதவரம் பால்பண்ணை ஆவின் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் லாரிகளில் சென்னையின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு முகவர்கள் மூலம் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், எர்ணாவூர் மகாலட்சுமி நகர், பிருந்தாவன் நகர், காந்தி நகர், காமராஜர் நகர், கன்னிலால் லே அவுட், திருவீதியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, எர்ணீஸ்வரர் நகர் போன்ற பகுதிகளில் ஆயிரம் பேருக்கு தினமும் ஆவின் பால் பாக்கெட்டுகள் முகவர்கள் மூலம் வினியோகிக்கப்படும்.

அதன்படி நேற்று காலை பொதுமக்கள் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்று வீட்டில் காய்ச்சினர். இவ்வாறு காய்ச்சப்பட்ட பால் கெட்டுப் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கெட்டுப்போன பாலை பாத்திரத்தில் கொண்டுவந்து சம்பந்தப்பட்ட முகவரிடம் காண்பித்து மீதம் இருந்த பால் பாக்கெட்டுகளை திருப்பி ஒப்படைத்தனர். இதனால் பால் முகவர்கள் அதிருப்தியடைந்தனர். எர்ணாவூர் சுற்றுவட்டாரத்தி–்ல், வினியோகிக்கப்பட்ட பெரும்பாலான ஆவின் பால் பாக்கெட்டுகள், ஒரே நேரத்தில் கெட்டு போனதாக திருப்பி தரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Dirty Ave , Milk packets of spoiled au, public, shock
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...