சென்னை: மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, பக்ரைன் நாடுகளில் சிக்கிய 608 இந்தியர்கள் சென்னை திரும்பினர். ஊரடங்கால் இந்தியர்கள் பலர், பல நாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மத்திய அரசு மீட்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பக்ரையினில் சிக்கிய 177 பேர், ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தனர். அவர்களில் 18 பெண்கள், 6 சிறுவர்கள் உட்பட 177 பேர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்தது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக 145 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூர் தனியார் விடுதிக்கும், 32 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடமான சென்னை நகர ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் 34 பெண்கள், 10 சிறுவர்கள் உட்பட 173 பேர் வந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்தது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்த 113 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூர் தனியார் விடுதிக்கும், 59 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடமான சென்னை நகர ஓட்டலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்திலேயே உயிரிழந்த ஒருவரது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை வந்தது.
அதில் 29 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 180 பேர் வந்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் தனிமைப்படுத்துவதற்காக 95 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூருக்கும், 85 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடமான சென்னை நகர ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர். ரஷ்யாவில் உள்ள அர்மெனியா நகரில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் 49 பெண்கள் உள்பட 78 பேர் வந்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும், தனிமைப்படுத்துவதற்காக 51 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூருக்கும், 27 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடமான சென்னை நகர ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.