டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.79 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,353,734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 479,805 பேர் உயிரிழந்த நிலையில் 5,041,711 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,911 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 440,215 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,011 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 248,190 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சதவிதம் 55.77 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்று பரவுதல் குறையவில்லை. இந்த நிலையில் இந்திய முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் தடுப்பது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து ஊரடங்கு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
முழு ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்த்துறைகளும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு ,குறு தொழில் முதல் பெரிய தொழில் வரை அனைத்தும் முடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் அடிமட்டத்திற்கு சென்றுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த பிரச்சனைகளை பற்றி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.