×

எச்-1பி, எச்-2பி, எல்-1 விசா நிறுத்தும் முடிவு; இந்திய நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா முடிவு செய்திருப்பது, இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு  நடத்தப்பட்டுள்ள  மிகப்பெரிய தாக்குதல் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்ைக: கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றினால் உலகப் பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை வேகமாகச் சந்தித்து வருகிற நேரத்தில், எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. கோவிட்-19 பேரிடரிலிருந்து  பொருளாதார ரீதியாக மீட்சி பெற  முயற்சி செய்யும் நம் இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு  நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் எச்-1பி விசாவில் 75 சதவீதம் பேர் நம்நாட்டை சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் படிப்பினை முடித்து வேலை தேடுவதற்கும், பெற்றுள்ள கல்விக்கடனை திருப்பிச் செலுத்துவதற்கும், இந்த “விசா நிறுத்தம்” தடையை ஏற்படுத்தி, கொரோனா நோய்த் தொற்று ஆபத்து உச்சம் பெற்றுள்ள நிலையில், தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல தவிக்கும் கடும் நெருக்கடியையும்  நம் மாணவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா உலகத்திற்கே முன்னோடி மட்டுமல்ல; நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் இத்துறையை நம்பித்தான் இருக்கிறது. அதற்கும்  அமெரிக்க அதிபரின் முடிவு, சிக்கலை ஏற்படுத்தி, இந்தியாவிற்கு சுமார்  40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த விசாக்கள் எல்லாம் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த போதே,  அமெரிக்க அதிபருடன் தாம் போற்றிவரும் நட்பை பிரதமர் பயன்படுத்தி இருக்க வேண்டும். அவற்றை செய்ய தவறியதால், அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்கள் நடக்கக் கூடாதென நினைத்தது இப்போது  நடந்தே விட்டது. ஆகவே, கோவிட்-19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இந்த  காலகட்டத்தில்-பின்னடைவான இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பா.ஜ. அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்திட வேண்டும். இரு நாடுகளின்  பொருளாதார மற்றும் தூதரக உறவினை மேம்படுத்திடும் வகையில் இந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் முடிவினை திரும்பப் பெற்று- அமெரிக்காவில் உள்ள இந்திய பணியாளர்களையும்- நம்நாட்டில் உள்ள அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றிட மத்திய பா.ஜ. அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : MU Stalin ,L-1 ,country ,attack ,Indian ,US , H-1B, H-2B, L-1 Visa, USA, Attack, MK Stalin
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!