சென்னை : 1000 ரூபாய் நிவாரணத் தொகையை வீடுகளுக்கு நேரில் சென்று மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்ட அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அறிவித்தது அரசு. ஜூன் 22 முதல் 26-ம் வரையிலான நாட்களுக்குள், தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், வீடுகளுக்கே நேரடியாக சென்று இந்த நிவாரணத்தை கொடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், பல இடங்களில் குடும்ப அட்டை தாரார்களை ரேஷன் கடைகளுக்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர்கள், மேலாண்மை இயக்குனர்களுக்கு கூடுதல் பதிவாளர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், குடும்ப அட்டை தாரர்களை ரேஷன் கடைகளுக்கு வரவழைக்க கூடாது, 1000 ரூபாய் நிவாரணத் தொகையை வீடுகளுக்கே நேரடியாக சென்று மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த சுற்றறிக்கையில், உத்தரவினை மீறும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிவாரணத் தொகை வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கப்படுவதை சார்நிலை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கண்காணிக்க தவறும் சார்நிலை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.