வேலூர்: வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோட்டை அகழி தூர்வாரும் பணிகள் நேற்று மீண்டும் தொடங்கியது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹32 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் இருந்து மிதவை இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, அதன்மீது ஜேசிபி எந்திரங்கள் நிறுத்தி கோட்டை அகழி தூர்வாரும் பணிகள் தொடங்கியது. கோட்டையைச்சுற்றிலும் அகழி தூர்வாரப்பட்டது. ஆனால் பூங்கா உள்ள பகுதிகளில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படாமல் தண்ணீரின்றி புதர்மண்டியே இருந்தது.
எனவே கோடிகளில் செலவு செய்து தூர்வாரும் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக தினரகன் நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியானது.இதற்கிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், சென்னையில் இருந்து அகழி தூர்வாருவதற்கான இயந்திரங்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் விடுபட்ட 500 மீட்டருக்கு அகழி தூர்வாரும் பணிகள் தொடங்கியது. அதனை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.