×

திருப்பத்தூரில் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் கொட்டிக் கிடந்த மீன்களை அள்ளிச்செல்ல குவிந்த மக்கள்!!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வழியாக மீன்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், தேசிய நெடுஞசாலையில் மீன்கள் கொட்டி சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து கேரளாவிற்கு மீன்களை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞசாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பச்ச குப்பம் என்ற இடத்தை கடந்தபோது அதி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த பெட்டிகள் அனைத்தும் சாலையில் விழுந்து, அதிலிருந்த மீன்கள் சாலை முழுவதும் சிதறின. இதனை கண்ட சக வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மீன்களை அள்ளிச்செல்ல குவிந்தனர்.

அப்போது, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். மேலும், இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, விபத்து காரணமாக மக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் நாகேஷ், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த உதவியாளர்கள் ராஜேஷ் மற்றும் திருமால் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



Tags : Lorry accident ,accident ,Thiruppathur ,Lorry crash , Lorry crash ,Thiruppathur ,accident
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!