சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிற பல்வேறு நடவடிக்கைகள், அந்த துறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள், படிப்படியாக நிறைவேற்றப்படுவதைக் காட்டுகிறது. ரயில்வே வாரியம் ஜூன் 17ம் தேதி வெளியிட்ட ஆணையில், இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் தொடரிகளை, விரைவு தொடரிகளாக மாற்றுவதற்கு, விரைந்து முடிவு எடுத்து, இரண்டே நாட்களுக்குள்ளாக தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இருந்தது. அவ்வாறு, விரைவு தொடரிகளாக மாற்றினால், பயணிகள் கட்டணமும், இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.
இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு, தொடரி பயணமே கட்டுபடியாகக் கூடியதாக இருக்கிறது. கொரோனா முடக்கத்தால், வருமானத்திற்கு வழி இன்றி மக்கள் தவிக்கின்ற வேளையில், இத்தகைய நடவடிக்கைகள் தேவையற்றவை, மக்கள் ஆட்சிக்கு எதிரானவை. எனவே, மக்களை கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும். பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.