×

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஆற்றில் வீச்சு: தாயிடம் போலீசார் விசாரணை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை ஆற்றில் வீசிச் சென்ற தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி வள்ளி (43). இவர் வீட்டுக்கு பின்புறம் உள்ள தென்பெண்ணையாற்றில் நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று ஆற்றின் மணல் பகுதியில் கிடந்தது. இதுகுறித்து அவர் திருக்கோவிலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் போலீசார், குழந்தை தொடர்பாக அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும் வகையல் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரை காவல்நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் திருக்கோவிலூர் அருகே உள்ள மிளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த முத்து மனைவி தீபா (32) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர், போலீசாரிடம் கூறியதாவது: தனக்கும் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 10 வருடத்துக்கு முன்பு திருமணமாகி கலைவாணன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முத்து சென்னையில் தங்கி கூலி செய்து வந்த நிலையில், அங்கேயே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் எங்களது செலவுக்கு பணம் தருவதில்லை. இதனால் நான், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அவ்வப்போது என்னை கணவர் முத்து வந்து பார்த்து செல்வார். இந்நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனக்கு 2வதாக குழந்தை பிறந்ததால் கடந்த 15ம் தேதி குழந்தையை தூக்கிக்கொண்டு சொந்த ஊரான திருக்கோவிலூர் மிளாரிப்பட்டுக்கு வந்தேன். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், சரிவர கணவர் பார்த்துக் கொள்ளாததால் இக்குழந்தையை எப்படி வளர்ப்பது என நினைத்து ஆற்றில் வைத்துவிட்டு வந்ததாக கூறினார். இதையடுத்து தீபாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அக்குழந்தையையும் தாயையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை அவரது தாய் ஆற்றில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : baby girl ,river ,birth , The girl, the police, is investigating
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை