×

முன்விரோத தகராறில் விபரீதம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கிரைண்டர், மிக்ஸி எரிந்து நாசம்: காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடியில் முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குண்டுவீச்சில் கிரைண்டர், மிக்ஸி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் செந்தில்குமார் (40). சிங்கப்பூரில் வேலை பார்த்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி திரும்பினார். நேற்றிரவு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஏசி அறையில், தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. செந்தில்குமார் எழுந்து வந்து பார்த்த போது, சமையலறையில் இருந்த கிரைண்டர், மிக்ஸி மற்றும் மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தார். இருப்பினும் பொருட்கள் எரிந்து நாசமாகின.

வெளியில் வந்து பார்த்த போது, திறந்திருந்த ஜன்னல் வழியாக சமையலறையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசாருக்கு செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக, செந்தில்குமாரின் வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்து குண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோத தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Disaster ,mixie ,Karaikudi , Dispute, gasoline bomb, grinder, mixie
× RELATED மழையின்போது அசம்பாவிதம் நேரிட்டால்...