×

சாயல்குடி பகுதியில் அழிந்து வரும் அரியவகை மரங்கள்: வனத்துறை காப்பாற்ற வலியுறுத்தல்

சாயல்குடி:  ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் நடந்ததாக கூறுகின்றனர். இப்பகுதியில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. அவற்றுள் சாயல்குடி பகுதியில் மாரியூர் பூவேந்தியநாதர், சாயல்குடி கைலாசநாதர், டி.எம்.கோட்டை செஞ்சடைநாதர் ஆலயம், ஆப்பனூர் அரியநாயகியம்மன், மேலக்கொடுமலூர் குமரன், மங்களம் ஆதிசிவன், கூரான்கோட்டை தர்மமுனீஸ்வரர், மீனங்குடி கல்லடிபெருமாள் கோயில், கடலாடி சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், எம்.கரிசல்குளம் வில்வநாதர், நரிப்பையூர் சிவகாட்டுஅய்யனார், பூங்குளம் அய்யனார் போன்ற கோயில்கள் இப்பகுதியில் மிகப்பழமையான கோயில்களாக உள்ளது.

மாரியூர், சாயல்குடி, டி.எம்.கோட்டை போன்ற சில கோயில்கள் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இருப்பதால் கட்டிடங்கள் பழமை மாறாமல் இருந்து வருகிறது. இங்கு புனித தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற முக்கியமான கட்டுமானங்கள் இயற்கை இடர்பாடுகளில் சிக்கி மறைந்து விட்டன. ஆனால் ஸ்தல விருட்சமாக போற்றப்படும் மரங்கள் மட்டும் பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கிறது. இவற்றுள் மாரியூரில் முன்னை மரமும், டி.எம் கோட்டையில் கடம்ப மரமும், மேலக்கொடுமலூரில் உடை மரமும், சாயல்குடியில் வன்னி மரமும், பூங்குளத்தில் புளிய மரங்களும், கூராங்கோட்டை, கடலாடி சமத்துவபுரம், மீனங்குடி, எம்.கரிசல்குளம், மங்களம் உள்ளிட்ட கோயில்களில் உகாய் எனப்படும் உகாய் எனப்படும் வில்வாகை வகையை சேர்ந்த வில்வ மரங்களும் உள்ளன. இம்மரங்களின் இலைகள், சிறுகாய், பழங்கள் போன்றவை தெய்வீகத் தன்மையோடு, அபூர்வ மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள், நீண்ட நாட்கள் உள்ள நோய்கள், வயிற்றுவலி, சிறுநீரக கல் அடைப்பு, உடல் வலி, மூட்டு வலி, பல் சம்மந்தமான நோய் போன்றவற்றிற்கு மருந்து பொருட்களாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மரங்கள் அனைத்தும் பல ஆண்டுகளை கடந்து விட்டதாலும், போதிய பராமரிப்புகள் இன்றியும் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது. எனவே பாரம்பரியமிக்க இத்தகைய மரங்களை பாதுகாக்க இந்து அறநிலைத்துறையும் வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மங்களம் சிவன்கோயில் பிரதோஷ கமிட்டியாளர்கள் கூறும்போது, மங்களம் ஆதிசிவன் கோயிலில் சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. அப்போதிலிருந்து இங்கு 100க்கும் மேற்பட்ட அரியவகை வில்வ மரங்கள் இருந்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அவை சேதமடைந்து விட்டதால் தற்போது 5 மரங்கள் மட்டுமே எஞ்சி உள்ளது. தெய்வீகத்தன்மை, மருத்துவகுணம் நிறைந்த மரம் என்பதால்  ஆட்டிற்கு கூட இலைகளை பிடிங்கி போடுவது கிடையாது. அப்படி பாதுகாத்து வந்தாலும் கூட, பல ஆண்டுகளை கடந்து வருவதால் சேதமடைந்து வருகிறது. எனவே வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, அபூர்வமான மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பாதுகாக்க வேண்டும்
தொன்மை பொருள் ஆய்வாளர் ராஜகுரு, ‘‘உகாய் எனப்படும் இத்தகைய மரங்கள் சங்க இலக்கிய காலத்தில் தொடர்புடையது. மரபு சார்ந்து, இயற்கையோடு சமநிலையை உருவாக்கும் நோக்கத்தில் முன்னோர்களால் வளர்க்கப்பட்டது. மருத்துவகுணம் வாய்ந்தது. இம்மரங்கள் நிறைந்து காணப்படும் காடுகளில் கோயில்கள் அமைக்கப்பட்டது. அய்யனார், சிவன்கோயில்களில் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு கோயில்களிலும் நாற்றுக்கணக்கான மரங்கள் இருந்தது. தற்போது அவை சேதமடைந்து, ஒரு சில மரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க மரங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : area ,Sayalgudi , Endangered , Sayalgudi area, emphasis, forest conservation
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...