×

கோவையில் வாயில் காயத்துடன், 10 நாட்களாக சாப்பிட முடியாமல் தவித்து வந்த 12 வயது யானை உயிரிழப்பு!!


கோவை : கோவையில் இறந்த யானைக்கு மற்றொரு ஆண் யானையின் தந்தம் குத்தியதில் வாயில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் ஜம்பு கண்டியிலுள்ள தோட்டம் ஒன்றில், வாயில் காயத்துடன் ஆண் யானை ஒன்று நிற்பதாக, இரண்டு நாட்களுக்கு முன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனசரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர், மருத்துவர்களை வரவழைத்து, 2 நாட்களாக பழங்களினுள் மருந்துகள் வைத்து, காயமடைந்த யானைக்கு கொடுத்தனர்.

தீவிர சிகிச்சைக்கு பின்னர் நேற்று காலை உடலில் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு மேல் சோர்வடைந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊசி மூலம் உடலினுள் மருந்து செலுத்தப்பட்டு, 25 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது.

இந்நிலையில் மேற்கண்ட சம்பவம் குறித்து வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், கோவையில் இறந்த யானைக்கு மற்றொரு ஆண் யானையின் தந்தம் குத்தியதில் வாயில் காயம் ஏற்பட்டு இருக்கலாம்.  யானையின் மேல் தாடையில் 9 செ.மீ. விட்டமும், 15 செ.மீ. ஆழமும் கொண்ட காயம் ஏற்பட்டுள்ளது. வாயில் ஏற்பட்ட காயத்தால் 10 நாட்களாக யானை உணவு உட்கொள்ளாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அருகிலேயே புதைக்கப்படும் என்றார். 


Tags : Goa , Gawai, mouth, wound, 12 year old, elephant, death
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு