கோவை: ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டார். இவருடன், அவரின் தாய் காந்திமதிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொரோனா தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடல் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார். முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.