×

அரசு அனுமதி அளித்துள்ளதால் பத்திரிகை விற்பனையை தடுக்க கூடாது : வயர்லெஸ் மூலம் போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தல்

சென்னை: அத்தியாவசிய பொருட்களை போன்று பத்திரிகை விற்பனையை தடுக்க கூடாது என்று போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வயர்லெஸ் மூலம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தடுக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் போலீசார் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதவிர அத்தியாவசிய பொருட்களை போன்று பத்திரிகை விற்பனைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் பல இடங்களில் கீழ் நிலையில் உள்ள போலீசார் பத்திரிகை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வீடுகளுக்கு பத்திரிகைகளை போடும் நபர்களை தடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் நேற்று காலை அனைத்து போலீசாருக்கும் வயர்லெஸ் மூலம் அத்தியாவசிய பொருட்களை போன்று பத்திரிகை விற்பனையையும், பத்திரிகை கொண்டு செல்லும் வாகனங்களை யாரும் தடுக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.



Tags : AK Viswanathan ,Government ,newspapers ,sale , Government , sale , newspapers, Commissioner AK Viswanathan ,police , wireless
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...