×

சென்னையில் முழு ஊரடங்கு விமான பயணிகள் வருகை குறைந்தது

சென்னை: சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்வற்ற முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டதால் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கின. சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு நேற்று 33 விமானங்களும், அதேபோல் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 33 விமானங்களுமாக மொத்தம் 66 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன.

சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் சுமார் 2,800 பேரும், சென்னைக்கு வந்த விமானங்களில் சுமார் 1,500 பேரும் என மொத்தம் 66 விமானங்களில் 4,300 பேர் மட்டுமே பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக கவுகாத்தியிலிருந்து சென்னை வருவதற்கு 4 பேரும், சேலம், மைசூரு, ராஜமுந்திரி விமானங்களில் தலா 6 பேரும், மதுரை விமானத்தில் 11, பெங்களூரு 12, தூத்துக்குடி 13, கொல்கத்தா 14, திருச்சி 19, திருவனந்தபுரம் 23 பேர் மட்டுமே பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர். முழு ஊரடங்கிற்கு முன்னதாக கடந்த 17ம் தேதி சென்னையில் இயக்கப்பட்ட 64 உள்நாட்டு விமானங்களில் மொத்தம் சுமார் 6,450 பேர் மட்டுமே பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai , Total curfew , Chennai, decreased
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...