×

மக்கள், மக்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கேட்டு, பரிசீலித்து கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: “மக்கள், மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனையை கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள்”  என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தி, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதுவரை 88 நாட்கள், ஊரடங்கு-ஊரடங்கிற்குள் ஊரடங்கு - படிப்படியாக தளர்வுகள் - தீவிரமான முழு ஊரடங்கு என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன; ஆனால் நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குள் கொரோனா நோய்த் தொற்று முடிந்து விடுமா என்று பார்த்தால் அதற்கான சிறிய அறிகுறிகூட தென்படவில்லை. நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. 1000 -1500 -2000 என்று மிக மோசமான எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

இப்போது கொரோனா இல்லாத மாவட்டங்களிலும் சேர்ந்து பரவியிருக்கிறதே தவிர, குறையவில்லை. நேர்ந்து வரும் இந்த பேரழிவைத் தமிழக அரசோ, தமிழக முதல்வரோ எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
கொரோனாவை முழுமையாக எப்போது கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு, ‘இறைவனுக்கு தான் தெரியும், நாம் என்ன டாக்டரா?’ என்று ஊடகவியலாளர்களை நோக்கி முதல் கேட்டுள்ளார், எதிர்க்கட்சியினர் எல்லாம் என்ன டாக்டர்களா என்று வினோதமான வினாத் தொடுத்த முதல்வர். எல்லாவற்றுக்கும் அரசாங்கம், அரசாங்கம் என்று சொல்லக் கூடாது, அரசாங்கம் என்று தனியாக எதுவும் கிடையாது, மக்கள்தான் அரசாங்கம் என்றும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். அதாவது, தனது அரசாங்கத்தால் செய்வதற்கு எதுவுமில்லை; செய்யத் தெரியவில்லை; செய்ய இயலவில்லை என்ற தனது இயலாமைக்கு, வேறுவேறு வார்த்தைகளின் மூலமாக முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
முதலில் விமானம் மூலமாகவும், ரயில் வழியாகவும் வந்திறங்கிய பயணிகள் மீது பழி போட்டார்கள்; பிறகு கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீது பழி போட்டார்கள்; அதற்கடுத்து மக்கள் மீதே பழி சுமத்தினார்கள்; இப்போது இறைவன் தலையில் பழியையும், பாரத்தையும் ஏற்ற முயற்சி செய்துள்ளார்கள். இன்று கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குப் பரவி விட்டதும், ‘இந்த நோயை ஒழிக்க முடியாது, கட்டுப்படுத்தத்தான் முடியும்’ என்று முதலமைச்சர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

இனிமேல் பரவாமல் தடுக்கவாவது தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவலர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கத்தையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணியாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. முதலில் இவர்களது பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அதனை அவரே மறுத்துவிட்டதாகவும், ஸ்டாலின் தான் அப்படிச் சொல்வதாகவும் முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். அமைச்சருக்கு நோய்த்தொற்று இல்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியது தான். மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்த மறுநாள் அவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் செய்தியை உறுதிப்படுத்திய பிறகு அவர் நலமடைய வேண்டி ‘டிவிட்டர்’ செய்தி வெளியிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் பழனிசாமி மறைக்க முயற்சிக்கிறார்.

ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அமைச்சர் அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று ‘ட்விட்’ செய்திருந்தாரே அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனிச்செயலராக பணியாற்றி வந்த பி.ஜே.தாமோதரன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனார். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ‘உடல்நலக் குறைவால்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இதனை மறைக்க வேண்டும்? மறைப்பதன் மூலமாக என்ன கிடைத்துவிடப் போகிறது?. நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை விட்டுவிட்டு நோய்த் தொற்று குறைவாக உள்ள சேலம் மாவட்டத்தில் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டத்துக்கு ஏன் அதிக சோதனைகள் நடத்தப்படவில்லை என்று கேட்கிறேன்.

சேலம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உடைகள் வழங்கியதைப் போல, சேலத்துக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதுமா? பழனிசாமி இன்னமும் ‘சேலம் யூனியன் பிரதேச முதலமைச்சரை’ போலத்தான் நடந்து கொள்கிறாரே தவிர, தமிழக முதலமைச்சராக எப்போது தன்னை நினைக்கப் போகிறார்?  மக்கள் சொல்லும் ஆலோசனைகளை-மக்களின் பிரதிநிதிகள் சொல்லும் ஆலோசனைகளை-கேட்டு, பரிசீலித்து நடந்து, கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குங்கள் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். அவரது  பேட்டி மனக்கவலை அளிப்பதாக உள்ளது; தமிழக மக்களின் கவலைகளை தீர்த்துவைப்பதாக இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : representatives ,MK Stalin ,Tamil Nadu ,CM , MK Stalin's, appeal , CM
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்