×

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை கொடுத்து பணியாற்றும் மருத்துவர், செவிலியருக்கு ஊதியம் தராமல் இழுத்தடிப்பதா?: கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்

சென்னை: கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை கொடுத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு  ஊதியம் தராமல் இழுத்தடிப்பதா என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று ெவளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல  முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் கடுமையாக கசக்கி பிழிந்து வேலை வாங்கப்பட்டு, பல மாதங்களாக ஊதியம் பெறாமல் அவதிப்படும் பரிதாப நிலையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உயிரைக் காப்பாற்றுவர்களையே மதிக்காத அரசுகள், உயிருக்குப் போராடும் ஏழை, எளிய நோயாளிகள் விஷயத்தில் எப்படி  நடந்து கொள்வார்கள்? தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் சில நகராட்சி மருத்துவமனைகளில் கொரோனா பணிக்காக சில சுகாதாரப் பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு தினசரி ஊதியமாக 550 தருவது என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது 450 மட்டுமே தரமுடியும் என அந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பேரம் பேசுகிறது. இவ்வாறு நடந்து கொள்ளும் அளவுக்கு அந்த நிறுவனத்துக்கு யார் தைரியம் கொடுத்தது? சுகாதாரத்துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த இக்கட்டான நிலையிலும் ஊழல் செய்வது கவலை அளிப்பதாக உள்ளது. இது போன்ற அவலங்கள் நிகழும் சூழலில் தான், உச்ச நீதிமன்றம் உரக்க குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர்கள் எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள் என்றும், சுகாதாரப் பணியாளர்களின் கால்களைக் கழுவி வணங்க  வேண்டும் என அரசுகள் இதுவரை சொல்லிவந்தது கபட நாடகமே என்பதை, உச்ச நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் கோபத்தை பாடமாக எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் இனியாவது மனித நேயத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : doctor ,disaster ,coroner ,KS Alagiri , Corona, calamity, KS Alagiri, heavy condemnation
× RELATED பூசணி விதையின் பயன்கள்!