×

பிளஸ் 2 தேர்வு எழுதாத 34,872 மாணவர்களுக்கு மறுதேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: பிளஸ்-2 தேர்வு எழுதாத 34,872 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்து உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி 75 சதவீதம் முடிந்துள்ளது. மீதி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் கருத்துகளை வெளியிடக்கூடாது. இதை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது.
அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் 10ம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாத்தூர் என்ற இடத்தில் ரேங்க் கார்டில் கையெழுத்து போடவே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத வரவில்லை. 10ம் வகுப்பிற்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழு அறிக்கை பெற்ற பிறகு முடிவு செய்யப்படும்.
12ம் வகுப்பை சேர்ந்த 34,872 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 25ம் தேதிக்குள் மாணவர்கள், பெற்றோர்களிடம் தேர்வு எழுத விருப்பம் உள்ளதா? என்பது குறித்து கடிதம் மூலம் கருத்து கேட்கப்பட உள்ளது. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Sengottaiyan , Plus 2 Examination, Interview with Minister Sengottaiyan
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து