திருவொற்றியூர்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த தொகை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. திருவொற்றியூர் பூங்காவனபுரம், ஒண்டிகுப்பம், காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் போன்ற பகுதிகளை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திருவொற்றியூர் தபால் நிலையம் மூலம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரண தொகையை வழங்க அப்பகுதியை சேர்ந்த தபால்காரர் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களிடமும் பணம் கேட்பதாகவும், அவ்வாறு கொடுக்க மறுத்தால், பொன்னேரியில் உள்ள நலவாரிய அலுவலகத்திற்கு சென்றுதான் நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாத நிலையில் இந்த நிவாரண உதவி பெறுவதற்கு பொன்னேரிக்கு செல்லமுடியாது என்பதால் வேறு வழியின்றி தபால்காரர் கேட்கும் பணத்தை பயனாளிகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. வைரஸ் தொற்று, ஊரடங்கு போன்ற பிரச்னைகளால் பாதிக்கபபட்டிருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் அடாவடியாக பணம் கேட்கும் தபால்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.