விருதுநகர்: கொரோனா ஊரடங்கால் மலேசியாவில் பாமாயில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பாமாயில் டின்னுக்கு ₹35 உயர்ந்துள்ளது. உலகளவில் பாமாயில் உற்பத்தியில் மலேசியா முன்னணி நாடாக உள்ளது. இந்த நாட்டிடம் இருந்துதான் இந்தியா கணிசமான பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய போது, அது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அதனால், அந்த நாட்டிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. இதனால், பாமாயில் மூலம் இந்தியாவிடம் இருந்து கணிசமாக சம்பாதித்து வந்த மலேசிய அரசு அதிர்ச்சி அடைந்தது. பின்னர், இந்திய அரசிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து, பாமாயில் இறக்குமதி மீண்டும் நடக்கிறது. ஆனால், முன்பை விட குறைந்தளவே இறக்குமதி செய்யப்படுகிறது. மலேசியாவிடம் இருந்து வாங்க வேண்டிய பாமாயிலை, வேறு நாடுகளிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் மலேசியாவில் பாமாயில் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் தெரிகிறது. ஒரு டின் பாமாயிலின் டின்னுக்கு ₹35 வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக, மலேசியாவில் ஜூன், ஜூலை மாதங்களில் பாமாயில் உற்பத்தி அதிகரித்து விலை குறைவது வழக்கம். ஆனால், கொரோனா பாதிப்பு ஊரடங்கால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, ஏற்றுமதி குறைவாக உள்ளது. இதனால், பாமாயில் டின்னுக்கு ₹35 உயர்ந்துள்ளது.
(அடைப்பிற்குள் கடந்த வார விலை): பாமாயில் (15 கிலோ) டின் - ₹1,310 (1,275), கடலை புண்ணாக்கு (100 கிலோ) - ₹5,100 (4,950).