டென்மார்க் : அண்டை நாடுகளுடன் சீனா அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவை கடுமையாக சாடினார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் எல்லையில் சீனா தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்டை நாடுகளுடன் அடாவடித்தனத்தை கையாளும் சீனா, தென்சீன கடலை ராணுவம் மயமாக்கி வருவதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
கொரோனா பரவல் குறித்து பொய் புகார் கூறியதுடன், அதனை உலகம் முழுவதும் பரவச் செய்துவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் இறந்ததற்கு சீனாவே காரணம் என்றும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.இவர்களுக்கு நேற்றைய தினம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மீண்டும் சீனாவின் அராஜகபோக்கை அமெரிக்கா கண்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.