சென்னை : முழு ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் சென்னையில் வழக்கம்போல் விமானங்கள் இயங்கின. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, வாரணாசி, அந்தமான், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 32 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் சுமார் 3,750 பயணிகள் பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர்.
அதேபோல் அந்த இடங்களிலிருந்து சென்னைக்கு 32 விமானங்கள் திரும்பி வந்தன. அந்த விமானங்களில் பயணிக்க சுமார் 1,600 பேர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று ஒரேநாளில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இயக்கப்படும் 64 விமானங்களில் சுமார் 5,350 பேர் பயணம் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் முழு ஊரடங்கிற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.