சென்னை : எட்டு வடிவ தளத்தில் 4 மணி நேரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ, தமது 55 வயதில் தொடங்கி கடந்த 6 வருடங்களில் இளைஞர்களின் உடற்பயிற்சிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று வருகிறார். பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் 21.1 கி.மீ. தூரத்தை 112 முறை ஓடி, தேசிய, ஆசிய சாதனைகள், மதிப்புறு முனைவர் பட்டம், இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் விருது பெற்றுள்ளார்.
ஊரடங்கு காரணமாக மார்ச் 17 முதல் சென்னை முழுவதும் உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், ஓடுதளங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மா.சுப்பிரமணியன் தனது கிண்டி தொழிலாளர் குடியிருப்பு வீட்டின் மொட்டை மாடியில் எட்டு வடிவ ஓடுதளத்தை வரைந்து அதில் தினமும் ஓட்ட பயிற்சி செய்ய தொடங்கினார். எட்டு வடிவத்தில் பலரும் நடைபயிற்சி செய்கிறார்கள். பலர் ஓடவும் செய்கிறார்கள். ஆனால் இதுவரை எட்டு வடிவத்தில் (27.2 அடி X 15.5 அடி) அதிக நேரம் அதாவது நான்கு மணி 8 நிமிடம் 18 நொடிகள் இடைநில்லாமல் 1010 முறை ஓடியது ஆசிய சாதனையாக ஏற்கப்பட்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் கடந்த 18ம் தேதி பதிவாகியுள்ளது.