திருவனந்தபுரம் : கொரோனா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கிய மலையாள மக்கள், கேரளா திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறவேண்டும் என்று கேரள அரசு கட்டாயமாக்கி இருந்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே, சில வளைகுடா நாடுகளில் கொரோனா பரிசோதனை நடத்த வசதி இல்லாததால் ‘ட்ரூ நாட்’ என்ற பரிசோதனை கருவிகளை அனுப்பி வைப்பதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியிருந்தார். இந்நிலையில், வரும் 24ம் தேதி வரை இந்த பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு திடீரென நேற்று அறிவித்தது. ‘ட்ரூ நாட்’ பரிசோதனை கருவிகளை வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப தாமதம் ஏற்படுவதால்தான் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.