சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இருந்து சேகரித்து வருகின்றனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன் திருவிக நகர், பூஞ்சோலை, கீழக்கோட்டை பகுதியில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வழங்கும் போது தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.
பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த உதவி இயக்குநர், துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளரிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் முள் செடிகளை அகற்ற வேண்டும் என கேட்டு கொண்டார். 9வது வார்டில் பழுதான அடிகுழாயை சரிசெய்ய உத்தரவிட்டார். ஆய்வின் போது, உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் வைரச்செல்வம், பேரூராட்சி செயல் அலுவலர் அ.கலையரசி, துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, அகிலன், சரவணன் உடனிருந்தனர்.