×

மூணாறு, லாக்காடு கேப் சாலையில் பயங்கர மண்சரிவு பாறைகள் உருண்டு விழுந்து 3 கட்டிடங்கள் தரைமட்டம்: பல ஏக்கர் விவசாய நிலங்களும் நாசம்

மூணாறு: மூணாறு, லாக்காடு கேப் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் 3 கட்டிடங்கள் தரைமட்டமாகின. பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் முழுவதும் பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை போன்ற 71 பகுதிகளில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணியளவில், லாக்காடு கேப் சாலையில் அமைந்துள்ள குகைக்கு அருகில் பயங்கர சத்தத்துடன் 250 மீட்டர் உயரத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. பாறைகளும் உருண்டோடின. 6 கிமீ தூரம் வரை சாலை பாறைகளாலும், மண்ணால் சேறும், சகதியுமாக காட்சியளித்தன.

பாறைகள் உருண்டு வந்ததில் கிளவிப்பாறை, பைசன்வாலி பகுதிகளில் குடியிருக்கும் வினோத், ராஜேஷ், பாலன், தங்கச்சன், பேபி போன்றவர்களின் விவசாய இடங்கள் சேதமடைந்தன. இங்கு ஏலக்காய், காபி போன்றவை பயிரிடப்பட்டுள்ள 25 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. மேலும், தனியாருக்குச் சொந்தமான 3 கட்டிடங்கள் தரைமட்டமானது. கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இரு வாகனங்களும் மண்ணுக்குள் புதைந்தன. பயங்கர சத்தத்துடன் 10 நிமிடங்கள் வரை நீடித்த மண்சரிவு மூலம், லாக்காடு கேப் பகுதியின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள கோமலிகுடி, சொசைட்டி மேடு பகுதியில் குடியிருக்கும் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.



Tags : buildings ,Lanekadu Cape ,land , 3 buildings ,ground leve,many acres , agricultural land destroyed
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!