சென்னை: அறநிலையத்துறையில் பெண் அதிகாரி உட்பட ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆய்வர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே போன்று ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இணை ஆணையர் ஒருவர் மற்றும் அவரது உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூடுதல் ஆணையர் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பணிக்கு வரவில்லை. அந்த அலுவலகத்தில் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால், அவர் தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள சிவன் கோயிலில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த கோயிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதே போன்று திருவல்லிக்கேணியில் உள்ள பெருமாள் கோயிலில் பணிபுரியும் எலக்ட்ரீஷியன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த கோயில் அலுவலகங்கள் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அந்த ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.