சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 5 உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மற்ற போலீசார் பணிக்கு வருவதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாம்பலம் இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து போலீசாரை கொரோனா பாதித்து வருவது அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் கிளை சிறையில் பணியாற்றி வந்த முருகனுக்கு சேலம் மத்திய சிறையில் முதல் நிலை வார்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர் பணியில் சேர்வதற்கு சேலம் மத்திய சிறைக்கு வந்த போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனை அறிந்து சொந்த ஊருக்கு திரும்பிய முருகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.