ஆவடி : ஆவடி அருகே பொத்தூரில் 7வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.ஆவடி அடுத்த பொத்தூர், உப்பிரபாளையம், அண்ணாநகர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7வயதில் மகள் உள்ளார். இவர்களது, உறவினர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தர்மதுரை (25). இவர், திருமுல்லைவாயல் பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14ந்தேதி தர்மதுரை மேற்கண்ட உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். அங்கு நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி சத்தம்போட்டு அலறி உள்ளார். அவளது அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து ஓடி வந்துள்ளனர். பின்னர், அவர்கள் தர்மதுரையின் பிடியிலிருந்து மகளை பெற்றோர் மீட்டுள்ளனர். இதன்பிறகு, தர்மதுரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
இது குறித்து பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், போலீசார் தலைமறைவாக இருந்த தர்மதுரை கைது நேற்று முன்தினம் செய்தனர். பின்னர், போலீசார் அவரை திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் பிறகு, நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.